திருவனந்தபுரம்: சபரிமலை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் முடிந்த நடை அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும்  மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது,.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து கோவில் நடை  18-ந்தேதி வரை 5 நாட்கள் திறந்ததிருக்கும்.

இந்த காலத்தில், அய்யப்பனுக்கு நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மாசி மாத பூஜையை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.