நெல்லை: அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


அய்யா வைகுண்டசாமி அவதார திருநாள், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். இதையொட்டி, நெல்லை மாவட்டத்துக்கு மட்டும், மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வுதொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (UnderNegotiable Instrument ACT-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அய்யா வைகுண்ட சாமி 191 வது பிறந்த நாள் விழா மாசிமாதம் 20-ம் தேதி 04.03.2023 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதால் அன்றைய தினம் வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும் 04.03.2023 அன்று வேலை நாளாக இருந்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும்

பள்ளிகள்/கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 11.03.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படு கிறது என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், அய்யா வைகுண்டர் அவதார திருநாள், தலைமை பதி அமைந்துள்ள குமரியில்தான் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதனால், குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் விடுமுறை விட வேண்டும் என அய்யாவழி பக்தர்கள், தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.