சென்னை: திருப்பூர் துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை  இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்து  திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 2ந்தேதி) கவுன்சிலர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதையடுத்து, ,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை (மார்ச் 4 ஆம் தேதி) மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முன்னதாக திமுகவில் கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் சில இடங்களில் மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை கேட்டு வந்தன. இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 4 பேர் குழுவை திமுக தலைமை அமைத்து ஆவன செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சில பதவிகளை ஒதுக்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது.அதைப்போல கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், பவானி,புளியங்குடி,அதிராம்பட்டினம்,போடிநாயக்கனூர் ஆகிய நகராட்சிகளுக்கான துணைத் தலைவர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

கீரமங்கலம், சேத்தூர், ஐம்பை, கூத்தைப்பார், ஊத்துக்குழி, மேல சொக்கநாதபுரம்  பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் சிபிஐ-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகளும்  சிபிஐ-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.