சென்னை:  முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. நாளை மாலை மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்.

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில்,   அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அதுபோல,  சட்டவிரோத பணி மாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி,  தனது அமைச்சர் பதவியை ரத்து செய்ய வேண்டும்  இல்லையேல் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், அவரும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர்களிடம் இருந்த துறைகள், மற்ற 3 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.  மேலும் புதிய அமைச்சராக, ஏற்கனவே சர்ச்சை காரணமாக அமைச்சர் பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொன்முடி வகித்து வந்த வனத்துறை, ப பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து நாளை மாலை நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவியேற்கிறார்.

முன்னதாக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வந்த மனோ தங்கராஜ்மீது  கனிமவளக்கொள்ளை தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 29ந்தேதி அன்று அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்த வந்தனர்.  “நெல்லையில் இருந்து குமரி எல்லையைத் தாண்டிச் செல்லும் லாரிகள் அனைத்தும் மனோ தங்கராஜ் தரப்பின் ஆசியுடனே சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அநத் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தனர்.  கனிமவளக் கடத்தலை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது என்ற வகையில் அரசுக்கு எதிராக போராட போராட்டக்குழுவும உருவானது.   இந்த குழு, அந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சர்ச்களின் ஆயர்கள்,  கோவில்களின் தலைமை ன அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அரசுக்கு எதிராக போராட பல்வேறு திட்டங்களை வகுத்தது.

இதனால் குமரி மாவட்டத்தில் திமுகவின் வாக்கு வங்கி கலைந்துவிடும் என்ற ஏற்பட்டது. இதனால், திமுக தலைமை  மனோ தங்கராஜ் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், மனோ தங்கராஜ்க்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.