விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
காஷ்மீரிலுள்ள பஹல்காமில் இம்மாதம் 22-ஆம் தேதி பிற்பகல் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.
பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பயங்கர வாதத்தை வேரறுக்க அரசு எடுக்கும் அனைத்து நடவ டிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க விரைவில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், விசா ரத்து என பல்வேறு அதிரடிகள் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவ விசா தவிர பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனிடையே, தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானிய பெண் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோவை நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி, தமிழ் நாட்டில் விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் தங்கியுள்ளனர் குறிப்பாக ஆப்பிரிக்கர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் என சுமார் 20 ஆயிரம் பேர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தங்கியுள்ளனர்.
விசா காலம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளி நாட்டினரால் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது இதற்கு இடம் கொடுக்காமல் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி தண்டபாணி தனது உரையில் குறிப்பிட்டார்.