சென்னை: மாண்டஸ் புயல் இன்று சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல்  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உள்பட புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இரவு நேரத்தில் பேருந்துகள், வாகனங்கள் இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.