‘மனத்தக்காளி’, கிராமங்களில் புதர்போல் மண்டிக்கிடப்பதால் அதை பெரும்பாலானோர் வயிற்றுவலி வந்தால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள்.

ஆனால், அது வயிற்று உபாதைகளை மட்டுமல்ல கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கும் மருந்தாக இருக்கிறது என்பதை கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையம் (RGCB) உறுதிப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொண்ட ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மைய விஞ்ஞானிகள் ‘சோலனம் நிகிராம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மனத்தக்காளி குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு வெளியாகியிருக்கிறது.

மனத்தக்காளிச் செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட ‘அட்ரோசைடு-பி’ என்ற மூலக்கூறில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மருந்து புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.

கைவிடப்பட்ட அரிய நோய்களுக்கான புதிய மருத்துவ வழிமுறைகளை கையாளுபவர்கள் இந்த மருந்தை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது இது கேரள விஞ்ஞானிகளின் ஆய்வுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

“கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையில் இந்த ஆராய்ச்சி ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்” என்று RGCB இயக்குனர் டாக்டர் சந்திரபாஸ் நாராயணா கூறினார்.