சென்னை:

றைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வளாகத்தில் கருணாநிதி திருவுருவச் சிலை திறக்கப்பட உள்ளது.

கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை திறந்து  வைக்க உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க நேற்று இரவு அவர் சென்னை வந்தார். அவரை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு திருவள்ளுவர் சிலை பரிசளித்தார்.

வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு இதே நாளில் (ஆகஸ்டு 7, 2018) தனது  94 வயதில் காலமான கலைஞர் மு.கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திமுகவுடன் நட்பு பாராட்டி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கருணாநிதி மறைந்த அன்று நள்ளிரவு, கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து மரியாதை செய்தார்.  தற்போது அவரது  அவரது முதலாமாண்டு நினைவு நாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில், கருணாநிதி  சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக நேற்று இரவு  சென்னை வந்திருக்கும் மம்தா, தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அவரை  மரியாதை நிமித்தமாக வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்.

முரசொலி வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா  நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழா முடிந்ததும் மாலை 6 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் சிலை திறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மம்தாவுடன், கேரள முதல்வர் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது. தமிழகத்தில் இருந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  ரஜினிகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் கலந்துகொள்வார்கள் என்ற நம்பப்படுகிறது.