டில்லி

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆளும் பாஜகவை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.  இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இதுவரை  ‘இந்தியா’ கூட்டணி மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து கூட்டங்களில் பேசப்பட்டாலூ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராகப் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரைத் தேர்வு செய்ய வேண்டும், தொகுதிப் பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும் எனப் பலராலும்  வலியுறுத்தப்பட்டது.  எனவே இன்று இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

இன்றைய கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணியின் தலைவர் பொறுப்பை ஏற்க நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கார்கே பெயரைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்ததாகத் தெரிகிறது.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தெரிவித்தால் இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக நிதிஷ்குமார் கூறி உள்ளார்.