வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக மற்றும் திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் ஆகியோரே மீண்டும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் தனது தரப்பில் வேட்பாளரை அறிவித்தது.

சமீபத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், இன்றைக்கு மக்கள் நீதி மய்யமும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா சட்ட விரோதமாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன், தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்னரே, மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கின்றது.

இச்சூழலில் மக்களின் நம்பிக்கையினை காப்பது என்பது மிக முக்கியம். எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது. எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.