சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்வதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மகாசிவராத்திரி விழா இராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, அங்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை  இல்லாத அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில், பொற்காலம் என போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றும்,  திருக்கோயிலுக்கு சொந்தமான  நிலங்கள் மீட்பு, திருக்குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சிவராத்திரியை முன்னிட்டு,  சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் வகையிலல்  அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மாகா சிவராத்திரி விழா 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்களைக் கொண்டு, சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை  நடைபெறவுள்ளன. ஆன்மீகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கபடவுள்ளது. அதில்,  பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

மகா சிவராத்திரி விழா  நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் 3000 நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி அன்று ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றதோ அதை விட செம்மையாகவும், மகா சிவராத்திரி ஏன் நடத்தப்படுகின்றது என பக்தர்களுக்கு தெரிந்துக் கொள்ளும் வகையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரி அன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கோயில் திருத்தேர் மற்றும் திருக்குங்களை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருக்குளங்கள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய திருக்குளங்களும் அமைக்கும் பணிகளும் தொடங்கப்படவுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகம் சீர்கெட்டு இருந்த நிலையில் அதை தூக்கி நிறுத்துவதற்கு சில காலம் தேவைப்படும். ஆக்கிரமிப்புளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்களை அரசுத்துறை மற்றும் அறம் சார்ந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை ரூ. 2042/- கோடி மதிப்பிலான கட்டடங்கள், நிலங்கள், குளங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இடங்களில் HRCE என்ற அடையாள கற்கள் பதிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. எட்டுக் கால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகின்றது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கவனத்திற்கு வருவதையும், வராததையும் கவனித்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிதம்பரம் திருக்கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டு வருகின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் விரும்ப தகாத சம்பங்கள் இந்து சமய அறநிலைய துறைக்கு கவனத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து முதல்வரின் உத்தரவின் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.