சென்னை: கடுமையான சர்ச்சைகள் எதிரொலியாக நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா குறித்த சர்ச்சை டீவீட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீக்கி உள்ளார்.

அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியபோது நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தவர் மாஃபா பாண்டியராஜன். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல் பொம்மை வைத்து பிரச்சாரம் செய்தவரும் இதே மாஃபா பாண்டியராஜன் தான்.

இந் நிலையில், 2017ம் ஆண்டு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவை ஆதரிப்பது போல் சித்தரித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதையடுத்து இறந்தவர்களை வைத்து தொடர் பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் பாண்டியராஜனை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

மேலும் அனிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தம்முடைய ட்விட்டர் பதிவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீக்கி உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து நீட் பற்றி ஒரு ட்வீட் போடப்பட்டு இருக்கிறது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ட்வீட் என்னுடைய அனுமதி இல்லாமல் வந்திருக்கிறது. அது எப்படி என கண்டறிந்து அதை செய்தவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சைபர் கிரைமில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது. பதிவு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.