மதுரை:

கார்த்தி நடித்துள்ள  தீரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தல் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தில் பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்கும் வகையில், காட்சிகளும் வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சீர்மரபினர் நலச்சங்கத்தினர்,  இது குறித்து கூறியதாவது:

“குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரை என்று கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பிறகு  குற்றப்பரம்பரை சட்டம் அகற்றப்பட்டது.

இதையடுத்து இந்தியா சுதந்திரம் அடைந்ததும் குற்றப்பரம்பரை என்று  கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள், சீர்மரபினராக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் பங்குபெறும் உரிமை அளிக்கப்பட்டது. குற்றப்பரம்பரை என்ற வார்த்தையை குறிப்பிட்ட சமூகத்தின்மீது பயன்படுத்தக்கூடாது என்று ஐ.நா மன்றமே உத்தரவிட்டு, இந்திய அரசுக்கு அனுப்பியது.

ஆனால் இந்த சீர்மரபினரை இழிவுபடுத்தும் வகையில், `தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் குற்றப்பரம்பரையினர் என வரும் வசனங்களையும், அதைக் குறிக்கும் காட்சிகளையும் நீக்க வேண்டும்ட என்று வலியுறுத்தினர்.

 

மேலும், “இது குறித்து படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் பலனில்லை. இதையடுத்து மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம். தீரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று தெரிவித்தனர்.