துரை சித்திரைத் திருவிழாவையொட்டி, இன்று காலை  கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை யில் வைகையாற்றில்  இறங்கினார். இந்நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ஏற்கனவே திருக்கல்யாணம், திருத்தேர் விழாக்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக, மதுரை  அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு நேற்று முன்தினம் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடி பகுதிக்கு வந்த  கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர்.

வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான மண்டபகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர், இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பக்தர்களுக்கு அவர் காட்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து இன்று  அதிகாலை, தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவிலில் வெட்டிவேர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின், பக்தர்கள் புடைசூழ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கப் புறப்பட்டார்.

கள்ளழகரை  வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த வீரரராகவ பெருமாள் வரவேற்றார். சரியாக 5.47 மணிக்கு பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபோது, வைகையின் இருபுறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நள்ளிரவில் மதுரையை வந்தடைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். உற்சாகத்துடன் தண்ணீரைப் பீய்ச்சியடித்தவாறே, அழகர் பெருமையை விளக்கும் பாடல்களை அவர்கள் பாடினர். இதன் காரணமாக மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.