சென்னை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த 9ந்தேதி மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சைபலனின்றி நேற்று (13ந்தேதி) இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆதீன மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சைவமும், தமிழும் இரு கண்களாக கருதி வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்த முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பாராட்டையும், அன்பையும் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.