சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக காவல்துறை முடிவு எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், காவல்துறையினரின் கேள்விக்கு பதில் அளிக்கவும் அதிமுகவுக்கு  உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ல் ஒற்றை தலைமை கோரிக்கை கடந்த சில நாட்களாக எழுந்துள்ளதால், ஒபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

அனால், பொதுக்குழு கூட்டத்தின்போது மோதல்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில்,  அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், ‘ அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருப்பதால் போக்குவரத்து சீரமைப்பு, காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்தும் அதுகுறித்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீது நீதிபதி சதீஷ்குமார் இன்று விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து,  அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்றும் காவல்துறையின் கேள்விகளுக்கு மதியம் 1 மணிக்குள் அ.தி.மு.க., பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் எம்.பி., எம்.எல்.ஏ., என யாராக இருந்தாலும் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் போது போலீஸ் சார்பில். பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினை எனில் ஓ.பி.எஸ்., தரப்பு போலீசை அணுகலாம் என கூறியுள்ளது..

மேலும்,  காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்கவும்  நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.