சென்னை: தலித் பிரச்சினையை காரணம் காட்டி, அறநிலையத்துறை விழுப்புரத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலை மூடி சீல் வைத்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தினசரி பூஜைகளுக்காக  கோயிலை திறக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான திரௌபதி அம்மன் கோவில். இந்தகோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற  திருவிழாவின்போது, அந்த பகுதி மக்களிடையே மோதல் ஏற்பட்டது. அபோது, கதிரவன் என்ற  தலித் இளைஞர்  தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது, இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  ஆனால், இதை ஜாதிய காரணமாக காட்டி,   மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் வழிபட தடை விதிக்க ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை கோவிலை மூடி சீல் வைத்தது. இது இந்த பகுதி மக்கள் மட்டுமின்றி, இந்துக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டன.

இதையடுத்து,  இந்த பிரச்சினையை சுமுகமாக முடிப்பதற்காக மயிலம், விக்கிரவாண்டி ,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்களும் ,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளீட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.  சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று கடந்த விசாரணையின்போது  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்,  சட்டம் ஒழுங்கு பிரச்னையால் கடந்தாண்டு மூடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க  உத்தரவிட்டார். மேலும், . பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை நியமிக்கவும் அறநிலையத்துறைக்கு  உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் , தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிபதி  அறிவுறுத்தி உள்ளார்.