சென்னை:

மிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில், பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி  காமிராக்கள் பொருத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பத குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க   தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ரயில் பயணிகளிடம் நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில், ரயில்களில் கண்காணிப்பு காமிரா பொருத்துவது குறித்து தென்னக ரயில்வே முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.

கடந்த  2014 ஆண்டு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காவலர் ஒருவர் ரோந்து பணியின்போது, சென்னைப் பெண் ஒருவரிடம் அத்துமீறி சேட்டை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து,  பல நாடுகளில் பேருந்துகள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. அது போன்ற கொள்கை தென்னக ரயில்வேயிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ரயில்களில் இரவு நேரங்களில் இது போன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொல்லைகள் எழுவதாக புகார்கள் எழுகின்றன என்று நீதிபதி வருத்தம் தெரிவித்து, காவலர் வினோத் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து விரைவாக தென்னக ரயில்வே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.