சென்னை: மத்தியஅரசு பணம் ஒதுக்காததால்,  எம்.டெக். பாடப்பிரிவுகளை ரத்து செய்தது,  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இது அழகல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-21 ஆம் ஆண்டில் எம்.டெக் படிப்பில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பிரிவுகளுக்கு  மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ள பாடப்பிரிவுக்கு பலர் விண்ணப்பத்திருக்கிற நிலையில்,   அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை எதிர்த்து, மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  அவர்களது மனுவில்,  மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும், அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்ததை திருமப பெற வேண்டும் என  மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், பல்கலைக்கழக முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம், இதுதொடர்பாக ஏற்கனவே  உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்து உள்ளதாகவும்,  நீதிமன்றம் எடுக்கும் முடிவை பொறுத்து கல்வியாண்டின் இடையில் கூட சேர்த்துக்கொள்ள முடியும் என  விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி புகழேந்தி, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகமே இட ஒதுக்கீடு முறை குறித்து முடிவெடுக்க வேண்டியதுதானே என்று கூறியவர், பணத்திற்காக படிப்பை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.

மருத்துவப்படிப்பில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் நிலையில், எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, மத்திய அரசு சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், பல்கலைக்கழக சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியுமா என்றும் வினவியதுடன்,  இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, வழக்கை பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, மத்திய மாநில அரசுகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் விளக்கத்தை கேட்டபின், அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறினார்.