சென்னை:
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மாறியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்கிழக்கு கடலில் இன்று உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றாலும் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் 11.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.