சென்னை:

ங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மழைப் பகுதிகளான  நீலகிரி தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை  பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நிலச்சரி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் அரபிக்கடலிலும் உருவாகி உள்ள  காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக  சென்னை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு  மீண்டும் மழை பெய்தது.

தறபோது, அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. மேலும்,  மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக,  தமிழகத்துக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும். மீனவர்கள் ஆந்திரா மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும்,  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது தூறல் விழும். ஒருசில நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.