சேலம்

மிழகத்தில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் லாரி உரிமையாளர்கள் வரும் மார்ச் 15 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் டீசல் விலை இந்தியாவின் 18 மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.   இதற்குக் காரணம் தமிழக அரசு மற்றும்  மாநில அரசின் வரிவிதிப்பு  அதிக அளவில் உள்ளதாகும்.   இதனால் லாரி உரிமையாளர்கள் மிகவும் துயருற்று வருகின்றனர்.

நேற்று சேலத்தில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்துக்கு பொதுச் செயலர் சண்முகப்பா தலைமை வகித்தார்.  அத்துடன் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   கூட்ட முடிவில் சண்முகப்பா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் இந்தியாவில் 18 மாநிலங்களைவிட டீசல் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு என்பது சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.  லாரி உரிமையாளர்கள் வாழ்வா, சாவா என்று வாழ்ந்துகொண்டு வரும் சூழலில், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. எனவே டீசல் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ‘வாட்’ வரியைக் குறைக்க வேண்டும்.

அத்துடன் ஃபாஸ்டேக் முறையினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தனியாகப் பணம் செலுத்திட ஏதுவாக சுங்கச்சாவடிகளில் ஒரு வழியைக் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாகக் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

மத்திய அரசின் 15 ஆண்டுகள் ஆன வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற முடிவால், தென் மாநிலங்களில் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும்.  இது குறித்து மத்திய அரசு, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேச வேண்டும்.

எங்கள் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மார்ச் 15ஆம் தேதி, பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், தென்மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வோம். இன்னும் 15 நாட்களுக்குள் மத்திய அரசு டீசல் விலையையும், மாநில அரசு வாட் வரியையும் குறைக்க வேண்டும்.

எங்களது கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

மத்திய அரசின் புதிய அறிவிப்பான 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் முயற்சியைக் கைவிடாவிட்டால் பல லட்சம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். நாங்கள் அறிவித்துள்ள லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி லாரி உரிமையாளர்களை மாற்று எரிபொருள் வழிக்குச் செல்லுங்கள் என்று  கூறியுள்ளார்  அவர் எத்தனால், கேஸ் ஆகிய மாற்று எரிசக்தியைப் பயன்படுத்திட அறிவித்தால் லாரி உரிமையாளர்கள் அதையும் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்”  எனத் தெரிவித்துள்ளார்.