டில்லி:

மிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில், தமிழகஅரசின், மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதி மன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.‘

தமிழகத்தில் உச்சநீதி மன்றத்தில் பல்வேறு எச்சரிக்கையை தொடர்ந்து லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ். உறுப்பினர்களாக  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தியும், சட்டத் துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமும், ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கு உறுப்பினர்கள் நியமனம்  செய்யப்பட்டதில் விதிமீறில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதை எதிர்த்து, உயர்நீதி மன்றம்  மதுரை கிளையில் கரூர்  ராஜேந்திரன் என்பவர்  பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  டிஎன்பிஎஸ்சி  முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதி மன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டது,  லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது என்றும், இவர்களது நியமன அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்தில்  உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்து, இருவரின் நியமனத்திற்கும்  கடந்த ஏப்ரல் மாதம் 6ந்தேதி  இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழகஅரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க  மறுப்பு தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தவழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,  லோக் ஆயுக்தா போன்ற அரசு அமைப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் பணி அரசு பணி என கருத முடியாது  என்று கூறி சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது.