சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என  தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தங்களுக்கு  பம்பரம் சின்னம் வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்திருந்தது. சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில், நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மதிமுக உயர்நீதிமன்றத்தில்  அவசர மனு கொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பம்பரம் சின்னம் பொது பட்டியலில் உள்ளதா என தெரிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட உள்ளதாகவும், இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்பது, நீதிமன்ற விசாரணைக்கு பதில் அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் பதிலைத் தொடர்ந்தே தெரியும்.