சென்னை: தமிழ்நாடு உள்பட முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வேட்புமனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. நேற்று (மார்ச் 26ந்தேதி) வரை  751 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து  மார்ச் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  வேட்புமனுத்தாக்கல்   இன்று (மார்ச்  27-ந் தேதி)  கடைசி நாளாகும்.   இன்று மாலை 3மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அதையடுத்து, நாளை (மார்ச் 28ந்தேதி) வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளில் இதுவரை ( மார்ச் 26ந்தேதி வரை)  751 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.