சேலம்:  ஆகஸ்டு 3 மற்றும் 9-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை  விடப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

ஆடி மாதத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு கோவில்களில் விசேஷங்கள், கொடைகள், திருவிழாக்ள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள், அதையொட்டி, ஆகஸ்டு 9ந்தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல,  ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆகஸ்டு 3-ம் தேதியும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 09.08.2023, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டம் 1881(Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 02.09.2023, சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.