சென்னை: சாதி, மதம், கட்சி என வேறுபாடின்றி அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென ரஜினிகாந்த் பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் தங்களது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசியக்கொடிக்கு கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை முகப்பு படமாக மாற்றினார்.

அதேபோல் பலரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தனர். இதுமட்டுமின்றி ஆகஸ்ட் 13முதல் 15ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் தேசியக்கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்றுவருகிறது. பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோரும் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிலையில் இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டு நமது நாடு சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டு. இந்தியா சுதந்திர அடைவதற்கு எத்தனையோ வருடங்கள், பல லட்சம் பேர் எத்தனையோ சித்ரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவத்திருக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த்” என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.