ராமேஸ்வரம்: 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, இன்று போராட்டம் அறிவித்துள்ள மீனவர்கள் சங்கத்தினர், இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம்  பகுதியைச் சேர்ந்த  மீனவர்கள், இலங்கை காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  தமிழக மீனவர்களின்  இரண்டு விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர்.  அவர்களை இலங்கை காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்த தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான விசாரணையில்,   கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன்,  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (பிப்.5) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின்  150 விசைப்படகுகளை மீட்டு தர வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ள தமிழக மீனவர்கள், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீனவர்கள் தேர்தலை புறக்கணித்து, தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.