சென்னை: அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 12ந்தேதி தனது பிறந்த நாளன்று யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 2021  மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக இயக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம், செய்தியாளர்களை சந்தித்த  ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தினார். அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறிய அவர், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்தார். மேலும் தற்போது நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துக்கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 12ந்தேதி அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்,  டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளன்று யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான்,  அண்ணாத்த பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் செல்ல உள்ளதாகவும், மேலும்,  பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் இல்லத்துக்கும் செல்லஇருப்பதால்,  தனது பிறந்த நாளென்று ரசிகர்கள் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து,  ரஜினி நேற்ற,  பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்னையிலிருந்து காரில் சாலை மார்க்கமாக சென்றதாகவும் கூறப்படுகிறது.