தராபாத்

குடியுரிமை சட்டம் குறித்து தம்முடன் அமித் ஷா விவாதம் செய்ய வேண்டும் என ஐமிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறி உள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து வருகிறது.   பாஜக சார்பில் லக்னோ நகரில் இந்த சட்டத்தை ஆதரித்து பேரணி ஒன்று நடந்தது.  இதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் போராட்டம் எவ்வளவு நடந்தாலும் இந்த சட்டம் திரும்பப் பெற மாட்டாது என அறிவித்தார்.

மேலும் அமித் ஷா எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டம் குறித்து மக்களிடையே அச்சத்தைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.    இந்த சட்டம் குறித்து தம்முடன் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மற்றும் மாயாவதி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதிக்கலாம் என அழைப்பு விடுத்தார்.  அமித் ஷாவின் உரை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நகரசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன.  வரும் 25 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள கரீம்நகர் நகரசபை தேர்தல் பிரசாரத்தில் ஐமிம் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் அமித் ஷாவுக்கு தனது உரையில் பதில் அளித்தார்.

அப்போது ஓவைசி, “அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரை அழைத்துள்ளார்.   அவர்கள் எதற்கு?  நான் இருக்கிறேன்.  இந்த தாடிக்காரருடன் குடியுரிமை சட்டம் மட்டுமின்றி தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை  பதிவேடு குறித்தும் அமித் ஷா விவாதம் செய்யலாம்” எனக் கூறி உள்ளார்.