சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள  லியோ படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே, பல்வேறு சர்ச்சைகளை   இன்று வெளியானது.  நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ  இன்று திரைக்கு வந்துள்ளது.  இருந்தாலும், படங்களை திரையிடுவதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டன. சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்த நிலையில்,  லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு  தொடங்கியது.  நள்ளிரவு 1.30 மணி வரை  5 காட்சிகளை திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லியோ படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை கோட்டு தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில்,  லியோ படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், லியோ திரைப்படமானது நாடு முழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து லியோ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.