சென்னை: தபால் நிலையங்களில் மானிய விலையில் எல்இடி பல்புகளின் விற்பனை சோதனை முறையில் துவங்கியுள்ளது.
தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 32 தபால் நிலையங்களில் இந்த விற்பனை நடக்கிறது. இந்த எல்இடி பல்பானது பிரபலமான நிறுவனத்தின் பல்பு என்று கூறப்படுகிறது.

வெளிச்சந்தையில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படும் ‘பிலிப்ஸ்’ நிறுவனத்தின் 9 வாட்ஸ் திறனுடைய எல்இடி பல்புகள், மானிய விலையில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஓராண்டு வாரன்டியுடன் விற்பனை செய்யப்படும் இந்த பல்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாளச் சான்றை எடுத்துச் சென்று, வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அடையாள அட்டை வாயிலாக, பல்பு வாங்கியவர்களின் விபரங்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும். உத்தரவாத காலத்திற்குள் பழுது ஏற்பட்டால், இந்த சேவை அமலில் உள்ள தபால் நிலையங்களில், பல்பை மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது, சென்னையில் முக்கியமான சில தபால் நிலையங்களில் பல்பு மட்டுமின்றி, டியூப் லைட் மற்றும் மின் விசிறி போன்ற பொருட்களும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்காதீர்த்தம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.