சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு அபராதத்துடன் 2வாரம் சிறை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று காலக்கட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி ஒருவர் உத்தரவு வாசித்துக்கொண்டிருந்தபோது, தன்னுடைய கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடன் இருந்த பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். இதை கண்ட நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதுதொடர்பான  காட்சிகள் சமூக வலைத்தளங்களில்  பரவி இருந்தது.

இதுதொடர்பாக  தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்த நீதிபதி  தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி  சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை, வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்தது. அதுமட்டுமின்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்தவழக்கு இன்று மீண்டும் நீதிபதி பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரம் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

ஏற்கனவே 34 நாட்கள் வழக்கறிஞர் சிறையில் இருந்ததால் தண்டனையை கழிக்க உத்தரவிடப்பட்டது. வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.