சென்னை: கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கு பட்டா கேட்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி மீட்க  வேண்டும்  இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் பட்ட கோரிய நிலம், கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.  அந்த நிலமானது, நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால் அதற்கு பட்டா வழங்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், பலர் கோவில் நிலத்தை அபகரிக்கக்கூடிய நோக்கில் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்து வருகின்றனர். அவற்றை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் குமார் மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால்,  அதற்குஅறநிலையத்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று கூறிய, மனுவை தள்ளுபடி செய்தது.  மேலும்,    தமிழகம் முழுவதும் உள்ள கோவில் நிலங்கள், அறநிலையத்துறைக்கு தெரியாமல் அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி ஆவணங்களை சேகரித்து இந்த நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பேராசை பிடித்த சிலருடைய இந்த மோசடியான நிலங்களை வாங்கியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றபோதிலும் அவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது என்று கூறி இந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.