டில்லி

நாடெங்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கச் சட்ட ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்துடன் பதவிக்காலம் முடிந்த, 21வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, இரண்டு முறை பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டது.  பிறகு, குடும்ப சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில், 2018ல் ஆய்வறிக்கையையும் தாக்கல் செய்தது.

தற்போது 22வது சட்டக் ஆணையம், வெளியிட்டுள்ள செய்தியில் ”பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக் கேட்பு நடந்து மூன்று ஆண்டுகளாகிறது. இந்த விவகாரத்தில் பல நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளன.

மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் குறிப்பை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary–lci@gov.in  என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகத் தெரிவிக்கலாம்.என்று கூறப்பட்டுள்ளது.