போர்பந்தர்

பிபோர்ஜாய் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குஜராத்தில் 50000 பேர் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசம் இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். வரும் 15ஆம் தேதி இந்த பிபோர்ஜோய் சௌராஷ்டிரா – கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. ஆக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 150 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் போர் பந்தர், ராஜ்கோட், மோர்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ஆம் தேதி வரை குஜராத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குஜராத்தின் கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.