சென்னை

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேர்  டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதில் மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 2 வாரத்தில் 37 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.