சென்னை:  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான  நிலஅபகரிப்பு வழக்கில் சுமார்  23 ஆண்டுகளுக்கு பிறகு  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பொன்முடி கடந்த  2007 மற்றும் 2011 திமுக ஆட்சியின்  காலக்கட்டத்தில் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது  பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக குவாரி உரிம நிபந்தனைகளை மீறி கருவூலத்திற்கு ரூ. 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு உள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், நிலஅபகரிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி வருமோ என எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி, கடந்த  1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது,  போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அங்கு குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொன்முடி உள்பட 10 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு  உள்பட 10 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ந்தேதி சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை எதிர்த்தும்,  தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி சிறப்பு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து  கடந்த 2007ம் ஆண்டு (26.4.2007 )  உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில், பொன்முடியை வழக்கில்  சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை  உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு (6.9.2017) ரத்து செய்தது.

இதையடுத்து, வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக  இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில்,  பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.  அதனால், அவர்களை விடுத்து மற்றவர்கள்மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில்  சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார்.