சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  ஜூன் மாதம் 3 ஆம் தேதி  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த  அமைச்சர் சேகர் பாபு, பேருந்து நிலையம் திறப்பு தாமதத்திற்கான காரணத்தை விளக்கினார்.

தமிழக தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையை அடுத்த வண்டலூருக்கு அருகிலுள்ள கிளம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி பொருட்செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. உலகத்தர கட்டமைப்பில் தயாராகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கூறப்பட்டு வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பணிகள் மேலும் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து,  இதையடுத்து  முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ந்தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். ஆனால், ஜூன் முடிந்து, ஜூலை மாதமும் பிறந்துவிட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில்,  கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேருந்து நிலையம் அமைக்கும்பணி நிறைவடைந்துள்ளது. ஆனால், டெர்மினஸைச் சுற்றியுள்ள சாலைகள், மழைநீர் வடிகால், பூங்காக்கள், கால்வாய்களில் தூர்வாரும் பணி, மருத்துவமனை, போலீஸ் அவுட்போஸ்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனால் பேருந்து நிலையம் திறப்பது தாமதமாகிறது. கடந்த அதிமுக அரசு திட்டமிட்டு செயல்படாமல்,  மோசமாக செயல்பட்டதால்தான் இந்த அளவுக்கு தாமதமாகிறது என குற்றம் சாட்டியவர், பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி,  சிறிய மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில்,  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிவடைந்தும் திறக்கப்படும் என்று கூறினார்.

லகத்தர கட்டமைப்பில் சென்னையை அடுத்த வண்டலூருக்கு அருகிலுள்ள கிளம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி பொருட்செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  தென் மாவட்ட பேருந்துகளுக்கான சிறப்பு பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

 குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுககுச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேருந்து நிலையத்தில், ஏராளமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட உள்ளன. அதோடு லிப்ட் வசதியும் இங்கு அமைக்கப்படவுள்ளது. மொத்தமாக 215 கடைகள் இங்கு உள்ளதால் பல விதமான உணவகங்கள் மற்றும் கடைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும், சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் ரயில் சேவையில் வண்டலூர் அருகே புதிதாக ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாடு அப்பகுதியைச் சுற்றி தடையற்ற போக்குவரத்துக்கு வசதியாக, அயனஞ்சேரி-மீனாட்சிபுரம் சாலையை ரூ.7.5 கோடியில் 60 அடி சாலையாக CMDA விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு வசதியாக ரூ.29 கோடி செலவில் வெளிவட்டச் சாலையில் வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிறுத்தும் வசதி செய்யப்படும் எனவும் ரூ.17 கோடி செலவில், முனையத்தில் இருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை மழைநீர் வடிகால் வலையமைப்பும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்  கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், கடந்த 2019ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பேருந்து நிலையம் பணிகள் முடிவடைந்த நிலையில், மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள்  எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.