திருப்பதி:  திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டு சென்னையில் விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாகவும்,   திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் 13ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான தரிசிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் முன்பதிவு படியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வைகுண்ட ஏகாதசி தொடர்பாக,  திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான செயல் அதிகாரி.  ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, 13-ந் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது  13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், திருப்பதி பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் ஏழுமலையான தரிசிக்கும் வகையில்  தினமும் 5 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 10 நாட்கள் 50 ஆயிரம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 கவுண்டர்கள் திறக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 13-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும்.

அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட் ஆன்லைனில் பெற்றவர்கள் காலை 9 மணி முதல் ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால்,  பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறி உடையவர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும்,  பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.ஆர். நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும்,  புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பல்வேறு ஊர்களில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சென்னையில் நாள்தோறும் 30 ஆயிரம் லட்டுகள், கல்யாண உற்சவ லட்டுகள் 500-ம் விற்பனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வேலூரில் 5 ஆயிரம் லட்டுகளும், பெங்களூரில் 10 ஆயிரம் லட்டுகளும், ஐதராபாத், விசாகப்பட்டினத்திலும் லட்டுகள் விற்பனை செய்யவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.