குவைத்:

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிலிப்பைன்ஸ் தூதர் வெளியேற குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம்

கடந்த பிப்ரவரி மாதத்தில் குவைத் நகரில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தொழிலாளி கொலை செய்யப்பட்டு ஃப்ரீசரில் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் கெடுபிடி கடைபிடிக்கப்பட்டது. மேலும், வேலை அளிப்பவரிடம் இருந்து ஒரு தொழிலாளியை விடுவித்த 2 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களை குவைத் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதர் ரெனாடோ வில்லா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். தனது தூதரகம் வீட்டு பணியாளர்களுக்கு உதவி செய்வது தொடர்பாக அவர் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் தூதகர் ரெனாடோ வில்லா ஒரு வார காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குவைத் அரசு உத்தரவிட்டிருப்பதாக குவைத் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் மனிலாவில் இருந்து தனது தூதரையும் குவைத் திரும்ப அழைத்துள்ளது.