ஆறாத ரணம் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று பாஜக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக நட்சத்திர பேச்சாளர் குஷ்பு உடல்நிலை காரணமாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா-வுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 2019ம் ஆண்டு விபத்து ஒன்றில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார்.