கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள குனிகல் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் டாக்டர் ரங்கநாத். எலும்பு மருத்துவரான இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் 2018 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

குனிகல் தாலுக்கா குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண் 10 ஆண்டுகளுக்கு முன் அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

ஒரே அறுவை சிகிச்சையை இரண்டு முறை செய்துகொள்ள யஷ்வினி யோஜனாவில் வழியில்லை என்ற நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள 4-5 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் எம்எல்ஏவிடம் வந்து தனது வேதனையை தெரிவித்தார். அந்த பெண்ணை போரிங் மருத்துவமனையில் அனுமதித்த எம்.எல்.ஏ ரங்கநாத் அவருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து வைத்தார்.

மேலும், இந்த வகை மூட்டு எலும்பு பிரச்னை உள்ள 23 பெண்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் ரங்கநாத் எம்எல்ஏ முன்வந்துள்ளார்.

ஏழைப் பெண்ணுகளுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கிவரும் எம்.எல்.ஏ.,வின் சேவை பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுள்ளது.