குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோவில், கோவை – மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.

காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா?

அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்க முனிவர் தவம் செய்து வந்தார்.

உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்க முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்க முனிவர்.

தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடுத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்!. கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.

காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார்.

மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பாண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.

காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.