சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில், 12 திருக்கோயில்களில் இந்த மாதம்  குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. குடமுழுக்கு நடைபெற உள்ள கோவில்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 1500 கோவில்களுக்கு 1000 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இந்த நிலையில்,  இந்துசமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரு மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்புப் பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில், வல்லுநர் குழுவின் கூட்டம் வாரம் இருமுறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று 200 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டம், பெரியகங்கணாங்குப்பம், அருள்மிகு சேமகளத்து மாரியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், மேலநத்தம், அருள்மிகு அருந்தபசு அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடி, அருள்மிகு சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில், கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம், அருள்மிகு பட்டத்தரசியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் அருள்மிகு ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில், ஆகிய திருக்கோயில்களுக்கு இந்த மாதம் 13ம் தேதி அன்றும், விருதுநகர் மாவட்டம், குன்னூர் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்புநகர், அருள்மிகு கம்மாள கருப்பசாமி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆகிய திருக்கோயிலுக்கு  15ம்தேதி அன்றும், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு 27ம்தேதி அன்றும், புதுக்கோட்டை மாவட்டம், அருள்மிகு ஆதி மத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோயிலுக்கு  அடுத்த மாதம் 9ம்தேதி  அன்றும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதேபோல் ஒவ்வொரு மாதமும் திருப்பணிகள் முடிவுற்ற திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு  உடனடியாக நடந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.