சென்னை: மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கேள்வி விடுத்துள்ளார்.

 தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறவுள்ள ஒற்றுமை பாதயாத்திரை குறித்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில், , மேலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த மண்டல நிர்வாகிகளுக்ககான ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி காஸ்மீர் வரை இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்களை பிரிக்கும் ஆர்எஸ்எஸ் தத்துவத்திற்கு எதிராகவும், இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்தத்தை கொண்டு வர உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.

அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியவர், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புக்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில் இது வரை பாஜக தலைவர் எவ்வித கருத்தும் கூறாமல் இருப்பதை சுட்டிக் காட்டியவர்,  ஏற்கனவே ஒரு குழந்தை இறப்பிற்கு உச்சநீதி மன்றம் வரை சென்றவர்கள் கனியாமூர் பள்ளி மாணவி இறப்பிற்கு மட்டும் ஆர்வம் காட்டாமல் இருப்பதின் மர்மம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார், ஆர்எஸ்எஸ் ஏன் மவுனமாக இருக்கிறது என்பதை அறிய தமிழக காங்கிரஸ் விரும்புகிறது என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதம் இருந்ததாகவும், தற்போதுள்ள பாஜக ஆட்சியில் 7 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக கூறிய அவர், கடன் வசூலில் இன்று வங்கிகள் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியவர், இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்திருப்பதாகவும், அதன் பொருள் இந்த நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

சமீப காலமாக டெல்லி, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் அதாவது, எங்கெல்லாம் எதிர்கட்சி ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம், அங்குள்ள எதிர்கட்சி ஆளுகின்ற இடத்திற்கு சென்று சோதனை செய்வதாகவும், ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற சோதனைகள் நடைபெறுவதில்லையே ஏன் என கேள்வி எழுப்பியவர், கெஜ்ரிவால், சிவசேனா, மம்தா ஆகியோர் ஆளும் போது தான் தவறு நடைபெறுகிறதா? பாஜக ஆளும் மாநிலங்களில் தவறே நடக்கவில்லையா எனவும், கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் விசாரனை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் பாஜக அவிழ்த்து விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், , ஜனநாயக முறையில் வெற்றி பெற்றவர்களை சர்வாதிகார முறையில் வீழ்த்த முயல்கிறார்கள், அவர்களுக்கு மக்கள்  விரைவில்  நல்ல பதில் சொல்வார்கள் என்றார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை பல மாநிலங்களுக்கு ஏற்புடையதல்ல என்பது நமது கருத்து என்று மேலும் தெரிவித்தார்.