சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த  இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் ஊர்வலம் போன்றவை நடத்த தடை விக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு,  நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், கொண்டாட்டங்களை நடத்தவும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. 10 அடிக்கு மிகாமல் சிலை இருக்க வேண்டும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் பயன்படுத்தக் கூடாது, ரசாயனப் பூச்சு பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விழா நடத்தவும் மாநகராட்சி, காவல் துறை மற்றும் மின்சார வாரியத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் இதுவரை 2 ஆயிரம் சிலைகளுக்கும், தாம்பரத்தில் 700 சிலைகளுக்கும், ஆவடியில் 500 சிலைகளுக்கும் என மொத்தம் 3 ஆயிரத்து 200 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.  சென்னையில் 992 சிலைகள் தற்போது வரை ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மீறியோ, முறையான அனுமதி பெறாமலோ சிலைகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  ஆலோசனை நடத்தினார்.

பொது இடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளைமுதல் பல்வேறு இடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன. இதையடுத்து, விநாயகர் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக   தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் காணொலி மூலம் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊர்வலத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறிப்பாக, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணி, தி.நகர், ஜாம்பஜார் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் அந்தந்த காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் தலைமையில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் நாள் சிலைகளை கரைக்க சென்னை காவல் மாவட்டத்தினுள் திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.