சென்னை:
கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுப்படுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை-2019 ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜிஎஸ்டி வரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்கும்போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும், 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை நடப்பு ஆண்டு இறுதிக்குள் அமைக்கவுள்ளது.

3 ஆயிரம் ரோபோக்கள் வாகனங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட உள்ளதாவும், இதன் மூலம் 2 வினாடிக்கு ஒரு மோட்டார் வாகனம் உற்பத்தி செய்ய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.