கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினந்தோறும் ஒருத்தரிடம் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சசிகலா, பூங்குன்றன் உள்பட  220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் என்ன, கொள்ளை போன பொருட்கள் எவை என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் 6வது குற்றவாளியான பிஜின்குட்டியின் சகோதரர் மோசஸ் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் பார்த்த அதிமுக நிர்வாகி  சஜீவன் மற்றும் அவரது சகோதரர் சிபி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சஜீவனின் மற்றொரு சகோதரரான சுனிலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில்  அவரிடம் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை பற்றியும், கொள்ளையடித்து சென்றவர்களுடன் இவருக்கு ஏதாவது தொடர்பு உண்டா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்தனர்.