சென்னை:  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது, தமிழ்நாட்டில் மேலும் 4ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்போறோம் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள், பேருந்துகளின் நிலைமை மோசமாக இருப்பது குறித்து, பேருந்து ஓட்டையில் இருந்து இளம்பெண் கீழே விழுந்த விவகாரம், மழை நேரங்களில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவது, தொடரும் கிளாம்பாக்க்ம பேருந்து நிலைய பிரச்சினை உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர்,  ‘தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை’ என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில்தான் 3ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன, அவை முறையான பராமரிப்பு செய்யப்படாமல் இருந்தால், பிரச்சினைகள் ஏற்படுகின்றன என  குற்றம்சாட்டினார்.

சமீபத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். ஏற்கனவே உள்ள 99 புதிய பஸ்களுடன் இப்போது 199 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

மேலும், 4 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் அவை வாங்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு நிதியில் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான பணியும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் புதிய பஸ்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் 10 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டன.

ஆசியாவிலேயே சிறந்த பஸ் நிலையமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வருவதற்கு தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம். 300-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இன்றும் கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்துதான் இயக்கப்படுகின்றன. தற்போது வரை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

இவ்வாறு  கூறினார்.